
ஜனாதிபதியுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றே பதவி விலக வேண்டும் என கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இல்லையென்றால் இலட்சக்கணக்கான மக்களுடன் இன்று முழு கொழும்பையும் சுற்றிவளைப்போம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போராளிகள் என்ற ரீதியில் தமக்கு இனி எந்த கோரிக்கையும் இல்லை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும், அதற்காக இலட்சக்கணக்கான மக்கள் இன்று கொழும்புக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதோடு, தற்காலிக ஜனாதிபதியாக ரணில் சில நாட்களுக்கேனும் பதவி வகிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று காலை நாட்டிலிருந்து அவர் வெளியேறியிருந்தார்.
பிறசெய்திகள்