21/2 கோடி மக்களை உதாசினப்படுத்தும் கோட்டா – இதுவரை பதவி விலகவில்லை!
இலங்கைத் திருநாட்டை இந்த மோசமான நிலைக்கு உள்ளாக்கியதாக மக்கள் குற்றம் சாட்டும் இலங்கை ஜனாதிபதி இதுவரை பதவி விலகவில்லை. இது இரண்டரை கோடி இலங்கை மக்களை மேலும் சீற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
கடுமையான மக்களின் எதிர்ப்பை அடுத்து 13 ஆம் திகதி பதவி விலகுவதாக சபாநாயகர் ஊடாக அறிவித்தல் விடுத்த கோட்டாபாய நேற்றைய தினம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
ஜனாதிபதியையும் பிரதமரையும் பதவி விலகுமாறு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை திருநாடே பாரிய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் கொந்தளிப்பு நிலையில் உள்ளது.
நேற்றைய தினம் ராணுவ தரப்பில் இருந்தும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த அரசியல் ரீதியாக தீர்வை காணும் மாறும், போராட்டத்தை கட்டுப்படுத்த மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முடியாது எனவும் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையிலிருந்து ராணுவ ஜெட் விமான மூலம் மாலைதீவு சென்ற கோட்டா பாய அங்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் குறித்த திகதியில் பதவி விலகுவதாக கூறி இருந்தும் பதவி விலகாது இவரின் இந்த செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கோரிக்கையையும் உதாசீனப்படுத்துவதோடு மேலும் சீற்றத்தை ஏற்படுத்துவதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.