வடக்கு, கிழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடக அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
நாட்டில் உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாக பாதித்திருக்கின்றது.
வடக்கிலும் கிழக்கிலும் பெரும்போக நெற்பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும்.
இத்தேவையை உடனடியாக பூர்த்திசெய்யுமாறு கோரி வடக்கு கிழக்கிலுள்ள சகல கமநல சேவைகள் மையங்களுக்கூடாக 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.
கொரோனாத் தொற்றுக் காரணமாக சிறிய எண்ணிக்கையானவர்கள், சமூக இடைவெளிகளைப் பேணி இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
பல இடங்களில் ஓரே நேரத்தில் நடைபெறவிருக்கும் இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





