அ.தி.மு.க. வின் 50ஆவது ஆண்டு பொன்விழா இன்று!

அ.தி.மு.க. வின் 50ஆவது ஆண்டு பொன்விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

1972ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் திகதி அ.தி.மு.க.வை தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றோடு 49ஆண்டுகள் நிறைவடைந்து, 50வது ஆண்டு பொன்விழா தொடங்குகிறது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியின் பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.

அதன்பின்னர் கட்சி கொடியை இருவரும் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கவுள்ளனர். தொடர்ந்து, அ.தி.மு.க. பொன்விழா சிறப்பு மலர் வெளியிடப்படவுள்ளது.

அதன்பிறகு தொண்டர்கள் புடைசூழ ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *