கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரிட்சையில் வட மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயம் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.
வட மாகாண ரீதியில் முதலாவது இடத்தையும், தேசிய ரீதியில் 35 ஆவது இடத்தையும் மடு கல்வி வலயம் பெற்றுள்ளது.
மடு கல்வி வலயத்தில் உள்ள மாணவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாணவர்கள் உரிய போக்குவரத்து வசதி இல்லாமையினால் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை, மேலதிக வகுப்புக்கு மாணவர்கள் செல்வதில் காணப்படும் இடர்கள் உள்ளிட்ட பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்த மாணவர்கள், பாடசாலை கல்வியையும், ஆசிரியர்களையும் மாத்திரமே நம்பி இருந்துள்ளனர்.
இந்நிலையில், மடு வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன் முயற்சியினாலும், மடு கல்வி வலயத்தில் உள்ள ஆசிரியர்களின் அயராத முயற்சியினாலும், அர்ப்பணிப்பான சேவையாலும் குறித்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக, சாதனையாளர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் வடக்கு மாகாணத்தில் 5 ஆவது நிலையிலும் தேசிய ரீதியில் 73 ஆவது நிலையிலும் இவ்வலயம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.






