நாங்கள் நடத்திய போராட்டத்தை இந்தியாவிற்கு எதிரான போராட்டம் என சித்தரிப்பதற்கு பலர் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இழுவை மடி தடைசட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நேற்றிரவு ஒரு இந்திய மீனவரின் உயிர் பிரிந்திருக்காது.
எனவே, இந்த சட்டம் ஒழுங்கான முறையில் உள்ளது, நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்தால் இப்படியான அநாவசியமான இழப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
இந்தத் தொழில்முறை தடை செய்யப்பட வேண்டும் என 2016 ஆம் ஆண்டு இந்திய அரசு மற்றும் எமது அரசும் ஒன்றாக பேசி இரண்டு அரசாங்கங்களும் இணங்கியபடி, இந்தத் தொழில் கடல் வளத்துக்கு பாதிப்பானது, சுற்றுச்சூழலை பாதிக்கிறது என அடுத்தடுத்த தலைமுறைக்கு மீன் வளத்தை இல்லாமல் செய்கிற விடயமாகும்.
இதனை எவர் செய்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தச் சட்டத்தை மீறி பலர் உள்நாட்டிலும் தொழில் செய்கிறார்கள். அவர்களுக்கு எதிராகவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவேண்டும்.
குறிப்பாக, குருநகர் பகுதியில் இருக்கிறவர்கள் 6 வருடங்களுக்கு முதல் என்னுடன் பேசும்போது ஆறு மாதத்தில் நிறுத்தி விடுவோம் என கூறினார்கள்.
ஆனால், தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள். கடல் வளங்கள் அளிக்கப்படுவதும் தெரிந்து கொண்டும் தொடர்ந்தும் செயற்படுகிறார்கள்.
உள்ளூர் மீனவர்களாக இருந்தாலும், வெளி மாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்தில் தொழில் புரிபவர்களாக இருந்தாலும், அந்நிய நாட்டிலிருந்து வந்து தொழில் புரிபவர்களாக இருந்தாலும் இந்த தொழில் முறையானது சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அது தொடர்ச்சியாக தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான விடயம்.
நாங்கள் நடத்திய போராட்டத்தை இந்தியாவிற்கு எதிரான போராட்டம் என சித்தரிப்பதற்கு பலர் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இது ஒரு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அல்ல.
இந்திய அரசாங்கமே 2016 ஆம் ஆண்டு இது தடை செய்யப்படவேண்டிய தொழில்முறை என உத்தியோகபூர்வமாக கூட்டறிக்கையில் அறிவித்து இருக்கின்றது.
ஆகவே, இது இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடும் தான். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு என்று வேண்டுமென்றே ஒரு கதையைக் கட்டி, மீனவர்களுடைய போராட்டத்தை வலுவிழக்கச் செய்கின்ற செயற்பாட்டில் பலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அதை முற்றாக நிராகரிக்கின்றோம். இந்தத் தொழிலை யார் செய்தாலும் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை. முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் படியே நாங்கள் நேற்று முன்தினம் கடல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






