மட்டக்களப்பு, களுவன்கேணி கடற்கரையில் சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்தவேளை, கண்டெடுத்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியொன்றை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து சமூகத்திற்கான முன்மாதிரியைக் காண்பித்துள்ளார்.
மட்டக்களப்பு, மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இராசதுரை தனுகரன் என்ற இச்சிறுவன் கண்டெடுத்த தங்கச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறுகோரி இன்று காலை ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்தவிடம் கையளித்தார்.
இதன்போது, பிரதேச கிராம சேவை அதிகாரி வீ. உதயகுமார் மற்றும் சிறுவனின் சின்னம்மா ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.
குடும்பத்தின் கடைசியான மூன்றாம் பிள்ளையான இவர் குடும்ப வறுமை நிலைகாரணமாக பாடசாலைக் கல்வியைக் கைவிட்டுள்ளமையுடன், இவரின் தாயார் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டுப்பணிப் பெண்ணாகப் பணியாற்றி வருகிறார்.
இவர், தனது சக நண்பர்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்தவேளை பொன்னிறமான சங்கிலியொன்றைக் கண்டெடுத்துள்ளார்.
அது தங்கமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பரிசோதித்து உறுதி செய்யப்பட்டமையைடுத்து, பொலிஸ் நிலையத்தின் ஊடாக உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச்சங்கிலியை எதிர்வரும் 27 ஆம் திகதியன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






