தமது வாட்ஸ்அப் அழைப்புக்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிவு செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றும் போது இதை தெரிவித்தார்.
வாட்ஸ்அப் அழைப்புக்களை ஒட்டு கேட்க முடியாத அளவிலான தொழில்நுட்பம் காணப்படுகின்ற போதிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏதோ ஓர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒட்டுக் கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் மட்டுமே தொலைபேசி உரையாடல்களை விசாரணை செய்ய முடியும்.
ஆனால் சமீபத்தில் தாம் வாட்ஸ்அப் பயன்படுத்தி பேசிய உரையாடல்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்து கடந்த மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவரது தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டமை தெரியவந்தது என்று சம்பிக்க குறிப்பிட்டார்.






