வவுனியா, தேக்கவத்தை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத்திருமணம் செய்துள்ளார்.
பின்னர், அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 21 ஆம் திகதி பெண்ணின் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு வந்து பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி அவர்களது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.
தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச்சென்றதாக குறித்த இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
எனினும், பொலிசார் குறித்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் குறித்த இளைஞர் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன், கூரிய ஆயுதத்தால் தனது கையையும் அறுத்துள்ளார்.
இதுதொடர்பில், பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்திருந்தனர்.
எனினும், பொலிசார் குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என இளைஞரின் உறவினர்கள் பொலிசாருடன் முரண்பட்டதுடன், நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
இதேவேளை, குறித்த இளைஞரை மீட்க இரு இளைஞர்கள் கோபுரத்தின் மீது ஏறியுள்ளனர்.








