இராணுவத்தினர் அபகரித்த 11 ஏக்கர் காணி விடுவிப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள மக்களின் காணிகளில் 11 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரிடம் இருந்து இன்று (28) விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார் 19 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீள்குடியேறிய மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்தனர்.

எனினும், சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் 682 ஆவது படைப்பிரிவு முகாம் கைவேலிப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ள போதும் இன்று வரை மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் குறித்த காணிகளில் பதினொரு ஏக்கர் காணி இன்று (28) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த ஒரு சிறு பகுதியை தவிர ஏனைய காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply