புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள 11 ஏக்கர் காணிகள் இன்று இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டு ஆவணங்கள் மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் மக்கள் தமது காணிகளை சென்று பார்வையிட்டுள்ளனர்
இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளை, அங்கு குடியிருந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் சட்ட நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் ஈடுபட்டுள்ளதாகவும், அதுவரை குறித்த காணிகள் கிராம சேவையாளரின் கண்காணிப்பில் இருக்கும் என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
காணியில் குடியிருந்தவர்ளை அழைத்து, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தலைமையிலான காணி கிளை அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்கள்.
29 பேருக்குரிய 10 ஏக்கர் காணியும் ஒருவரின் 1 ஏக்கர் காணியும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.
தங்கள் வாழ்விடங்களை பார்வையிட்ட உரிமையாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
பிரதேச செயலாளர் தங்களிடம் தெரிவித்துள்ள கருத்தில், இந்த காணி கடந்த காலத்தில் அரசாங்கத்தினால் லீசிங் அடிப்படையில் கொடுக்கப்பட்ட காணி, லீசிங் காலம் முடிவடைந்தபடியால் அது அரச காணியாகத்தான் கிடைக்கும்.
நீங்கள் வான்பயிர்களை நாட்டி, வாழ்ந்துள்ளீர்கள்.எனினும் காணியில் எந்த ஒரு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்க கூடாது.
சட்ட ரீதியிலான நடவடிக்கை மூலமே காணிகளை மக்களுக்கு வழங்கப்படும்.
இந்த பகுதியில் அரசாங்கத்திற்கும் காணியினை வழங்கமுடியுமானால் அதனையும் வழங்கி உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் என்று காணியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்தவகையில் காணிகளின் எல்லைகளை அடையாளப்படுத்த முடியுமே தவிர வேறு எந்த நடவடிக்கையும் நாங்கள் மேற்கொள்ள முடியாது.
பலரது காணியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் காணப்படுகின்றன
சிலரது காணிகளில் ஒன்றும் இல்லை, சிலரது காணிகளில் தென்னை மரங்கள் நிக்கின்றன என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நாங்கள் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த காணிகளில் வீடமைந்து வாழ்ந்து வந்துள்ள நிலையில், எங்கள் சொத்துக்கள் அனைத்தும் போரின் போது அழிக்கப்பட்டுவிட்டன.
படையினரால் கட்டப்பட்ட கட்டிடங்களே இதில் மிஞ்சியுள்ளதோடு,தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றும் உள்ளன என மேலும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்






