
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடத்தப்படும். இதன் மூலம் ஒவ்வொரு அணியிலும் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படும்.
அடுத்தாண்டு 2 புதிய அணிகளும் ஐபிஎல் தொடரில் சேர்க்கப்படவிருப்பதால் ஏலத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.
புதிய அணிகளின் வருகையால் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற குழப்பம் இருந்தது. இறுதியில் நேற்றைய தினம் இதற்கான தகவல் வெளியானது.
அதில், ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரர் என்ற வகையில் தக்க வைக்கலாம். அப்படி இல்லையென்றால் 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 அயல்நாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் எனக்கூறப்பட்டது.
இதே போல புதிதாக வரும் 2 அணிகளுக்கும் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க பட்டுள்ளது. அதாவது புதிய அணிகள் இரண்டும், ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பழைய அணிகள், தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களை அறிவித்த பின்னர் மீதமுள்ள வீரர்களை ஒப்பந்தம் செய்துக்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு புதிய அணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பழைய அணிகள் தக்கவைப்பதற்கு முன்னதாகவே நாங்கள் ஒப்பந்தம் செய்துக்கொள்ள அனுமதி வேண்டும் எனக்கோரி வருகின்றனர்.
இந்நிலையில் மெகா ஏலம் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் தங்களது தக்கவைக்கப்போகும் வீரர்களின் பெயர்களை டிசம்பர் 3ம் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளது. இதே போல ஐபிஎல் மெகா ஏலம் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்போதைய சூழலில் அனைத்து அணிகளுமே புதிய கேப்டன்களை தேடி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மட்டும் தான் கேப்டன்களை மாற்ற வேண்டிய அவசியம் இன்றி உள்ளன.
சிஎஸ்கே அணியில் கேப்டன்சி குழப்பம் நீடித்த சூழலில் அடுத்தாண்டும் தோனி நிச்சயம் சிஎஸ்கேவில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





