கொழும்பில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் பொது நிலைப்பாடு எட்டும் நோக்கில் இன்று விசேட மாநாட்டில் ஈடுபட்டனர்.
இதற்கமைய குறித்த மாநாட்டில் 4 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
- பலமான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20 ஆம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட பின்னணியில், நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள், அனைத்து மாற்று அரசியல் கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சிகளினதும் மற்றும் அனைத்து சமூக குழுவினர்களினதும் பிரதிநிதித்துவங்களுக்கு வழிவகுக்கும் வண்ணம், முழுமையான விகிதாசார முறைமையின்படியே நடத்தப்பட வேண்டும்.
இதன்மூலம் நாடாளுமன்றமும், மாகாணசபைகளும், உள்ளூராட்சி மன்றங்களும் தமது பன்மைத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவம் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணித்து சமநிலைப்படுத்தும் நிறுவனங்களாக ஜனநாயகத்தின் பேரில் செயற்பட முடியும்.
- நாடாளுமன்றத்தினதும், மாகாணசபைகளினதும், உள்ளூராட்சி மன்றங்களதும் கட்சி அங்கத்துவ எண்ணிக்கை தொகுப்பு, வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்த வாக்கு ஆணையை அதிகபட்சமாக பிரதிபலிக்க வேண்டும்.
வெற்றி பெரும் கட்சி, அளிக்கப்பட்ட வாக்குகளில் தாம் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தை விட, அதிக விகிதாசார எண்ணிக்கையில் ஆசனங்களை எடுத்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். வாக்கு விகிதாசாரமும், சபை அங்கத்தவர் எண்ணிக்கை விகிதாசாரமும், சாத்தியமானளவில் ஒன்றை ஒன்று ஒத்து போக வேண்டும். இந்நிலைமையை விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
- உள்ளூராட்சி, மாகாணசபைகள், நாடாளுமன்றம் ஆகிய மூன்று மட்ட தேர்தல்களுக்குமான சீர்திருத்தங்கள், தெரிவுக்குழுவால் ஒரே வேளையில் தயார் செய்யப்பட்டு, ஒரே சட்டமூலத்தின் மூலம் அரசமைப்பு திருத்தமாக கொண்டு வரப்பட வேண்டும்.
- ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல்களை, முன்னுரிமை கொடுத்து, விகிதாசார முறையின் கீழ் நடத்த அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும். ஆகிய தீர்மானத்தை எட்டினர்.
இம் மாநாட்டில் தமிழ் முஸ்லிம் கட்சிகளான, தமிழ் தேசிய கூட்டமைப்பு (தமிழரசு கட்சி, ரெலோ, புளொட்), தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் (ஜமமு, தொதேமு, மமமு), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, ததேமமு ஆகிய கட்சிகள் சந்தித்து தேர்தல் முறை தொடர்பில் ஒன்றுபட்டு செயற்பட தீர்மானித்தன.










