ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணில் ஆகியோரது ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் முறையற்ற வகையில் எமது அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்திற்கு யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை விலைமனுகோரல் இல்லாமல் வழங்கியுள்ளது என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்தால், எதிர்காலம் எம்மை சபிக்கும். இதன் காரணமாகவே மக்களிடம் அனைத்தையும் பகிரங்கப்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.
இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், எந்த அரசாங்கமும் விலை மனுகோரல் இல்லாமல் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்கவில்லை.
கடந்த அரசாங்கங்களைக் காட்டிலும் இந்த அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது என்பதைக் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிற நாடுகளுக்குத் தேசிய வளங்களை வழங்குவது ஆபத்தானது, அதிலும் அமெரிக்கா என்பது மிகவும் அச்சுறுத்தலானது.
இலங்கையின் சுயாதீனத்தில் தொடர்ந்து அமெரிக்கா தலையிடுகிறது. கடந்த காலங்களில் பல அழுத்தங்களைப் பிரயோகித்தது. இராணுவத்தினரைத் தண்டித்தல், சமஸ்டி அரசியல் யாப்பு உருவாக்கம் ஆகிய விடயங்களில் அமெரிக்கா தொடர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கிறது.
வலு சக்தி துறை நாட்டினதும், அரசாங்கத்தினதும் இருப்பிற்குப் பிரதானமானது. இலங்கைக்கு எரிவாயு விநியோகிக்கும் உரிமை அமெரிக்க நிறுவனத்திற்கு நிரந்தரமாக வழங்கப்பட்டுள்ளது.
வலுசக்தியின் அதிகாரங்கள் அமெரிக்கா வசம் சென்றால் அமெரிக்கா இதற்கு முன்னர் விதித்த கட்டளைகளைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய வரும். அத்துடன் சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளைப் பகைத்துக் கொள்ள நேரிடும்.
அமெரிக்காவின் ஆதிக்கம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உலக நாடுகளின் நடப்பு நிலவரங்கள் ஊடாக அறிந்து கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






