நீங்களாகவே வெளியேறுங்கள்; இல்லையேல் அதிகாரிகளின் முறைகேடுகள் மக்கள் முன் அம்பலப்படுத்தப்படும்! – வடக்கு ஆளுநர் எச்சரிக்கை

கடந்த காலங்களில் வடக்கு மாகாண நிர்வாகம் ஒரு சில அதிகாரிகளை திருப்திப்படுத்தும் முகமாககவே செயற்பட்ட நிலையில் தவறுகளை விட்ட அதிகாரிகள் தாங்களாகவே உணர்ந்து வெளியேறி மாகாண நிர்வாகத்தை வினைதிறனாக நடத்துவதற்கு வழி விட வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிர்வாக அதிகாரிகளின் மாற்றம் தொடர்பில் ஆளுநருடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் கீழ்நிலை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மறைக்கப்பட்டு ஒரு சில மேல் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் செயற்பட்டமை தமக்கு ஆதாரபூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் பொதுவான கட்டமைப்பு.

வடக்கு மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் மாகாணத்தின் நிர்வாக விடயங்கள் சரிவர இடம்பெறுகிறதா என கண்காணித்தல் மற்றும் அரச சேவையின் ஊடாக பொது மக்களின் தேவைப்பாடுகள் அபிவிருத்திகளை உறுதி செய்தல் எனது பொறுப்பு.

வடமாகாண நிர்வாகத்தில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருத்தி அடைய முடியவில்லை.

இலங்கையில் உள்ள ஏனைய எட்டு மாகாணங்களில் உள்ள விவசாய பணிப்பாளர்கள் எவ்வளவு காலம் பணியில் இருந்தார்கள், எவ்வளவு காலம் இருக்க முடியும் என ஆராய்ந்தால், வடக்கு மாகாணத்தின் செயற்பாடுகள் சற்று வித்தியாசமாக இருக்கிறது.

இலங்கையில் உள்ள விவசாய நிர்வாக தரம் 1 உள்ள அதிகாரிகளை மாகாண விவசாயப் பணிப்பாளராக மத்திய விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் நிர்வாக ஒழுங்குபடுத்தலின் கீழ் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் அனுப்பப்படுகிறார்கள்.

அகில இலங்கை சேவை தரம் 11, 111 ஆகிய பதவி வகிக்கும் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதே துறையைச் சேர்ந்த மேலதிகாரிகளால் விசாரணை நடாத்தப்பட்டது. அதன் பெறுபேறு என்ன?.

வடக்கு நிர்வாகம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு எவ்வளவு காலத்துக்குள் மனித உரிமை ஆணைக்குழு தீர்வை வழங்கியுள்ளது.

வடமாகாண பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட மாகாண நிர்வாக அதிகாரிகள் தொடர்பிலான விசாரணைகளை எவ்வளவு காலத்துக்குள் முடிவுறுத்தப்பட்டது, சில முரண்பாடுகள் மறைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

சில முறைப்பாடுகள் விசாரிக்கும் போது குற்றஞ்சாட்டப்பட்டவரின் பெயர் கூட குறிப்பிடாமல் விசாரணைகள் இடம் பெற்றமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஒரு சிலரின் தேவைக்கேற்ற சினேகபூர்வமாகச் செயற்படும் அதிகாரிகளினால் கீழ் நிலை அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது.

ஆளுநர் இடமாற்றங்களை வழங்குவதில்லை, பொதுமக்களால் அல்லது அதிகாரிகளினால் சக அதிகாரிகள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை இடம்பெற்று உறுதிப்படுத்தப்படுமானால் பணிநீக்கம் அல்லது தண்டனை வழங்குதலை ஆளுநர் என்ற வகையில் மேற்கொள்வேன்.

வடக்கு மாகாணத்தில் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கோப்புகள் என்னிடம் இருக்கின்ற நிலையில், மக்களை யாரும் திசை திருப்ப முடியாது.

ஆளுநர் என்ற வகையில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன், இவ்வளவு காலமும் தவறுகள் செய்தவர்கள் தாங்களாகவே இடமாற்றத்தைப் பெற்றுச் சென்று மாகாண நிர்வாகத்தை உரிய முறையில் மேற்கொள்ள வழிவிட வேண்டும்.

எனது பொறுமையாய் சோதிக்க விரும்பினால் விசாரணைக் குழு அமைத்து எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு, முறைகேடுகள் தொடர்பில் பொது வெளியில் அம்பலப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவேன்.- என அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *