13 ஆவது திருத்தம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகக் கொள்ள முடியாது! தமிழ் அமெரிக்கர்கள் குழு

13 ஆவது திருத்தம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகக் கொள்ள முடியாது என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

13ம் திருத்தத்தின் வழி வந்த மாகாணசபை ஆட்சி முறை தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளான நில ஆக்கிரமிப்புகள், நிலப் பறிப்புகள், ஈழத் தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்கான குடியேற்றங்கள், தமிழ்த் தேசத்தின் கட்டமைப்புகள் மீதான அழிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் எதையும் தீர்க்கவில்லை, தீர்க்க வலுவற்றது என்பது தமிழர் நலன்களை உண்மையாக விரும்பும் எவருக்கும் தெரிந்ததே என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

13ம் திருத்தமும் இதன் கீழான மாகாண சபை முறைமையும் 34 வருடங்களாக அமுலில் உள்ளது. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைத்தவிர 13 ஆம் திருத்தத்தில் கூறப்படுகின்ற அதிகாரங்கள் மாகாண சபைகளிடமிருந்து முற்றாகப் பறிக்கப்படவில்லை.

ஆனாலும், வடக்கு மாகாண சபையால் சிங்கள அரசின் இனவழிப்பு முயற்சிகளைத் தடுக்க முடியாதது மட்டுமல்ல, முதலமைச்சர் நிதியமொன்றைக் கூட உருவாக்க முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தைப் பாதுகாத்து வருகின்ற ஓற்றையாட்சியின் கீழ்வரும் எந்த ஒரு அரசியல் தீர்வும் தமிழர்களின் மீதான சிங்கள அரசின் இனவழிப்பைத் தடுக்கும் வலுவைக் கொண்டிருக்காது என்பதும் தெரிந்ததே.

இதனால்தான், புலிகள் மட்டுமன்றி புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் கட்சிகளெல்லாம் 13ம் திருத்தத்தை தமிழ்த் தேசியப் பிரச்சினைக்ககான ஒரு தீர்வாகவோ அல்லது அதற்கான ஆரம்பப் புள்ளியாகவோ தன்னும் கொள்ள முடியாது என்றும் ஒற்றையாட்சியை இல்லாதொழித்து, தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கக் கூடிய ஒரு அரசமைப்பே தமிழர்கள் வேண்டுவது என்று கூறி வாக்குக்கேட்பதுமல்லாமல் ஈழத் தமிழ் மக்களும் அந்த நிலைப்பாட்டிற்கே தமது வாக்குகளை வழங்கி அதை அங்கீகரித்தும் வருகின்றனர்.

இது மட்டுமல்லாது 2010 இன் பின் மக்களால் பெருமெடுப்பில் நடத்தப்பட்ட அல்லது தமிழ்த் தேசியக்கட்சிகளால் நடத்தப்பட்டு மக்கள் பெருமெடுப்பில் கலந்து கொண்ட பேரணிகளிலும் மக்கள் இதையே தமது பிரகடனங்களாக வெளிப்படுத்திருந்தனர்.

ஆனால், இன்று சில தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவிடம் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கேட்க வேண்டும் என்று புறப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக அண்மையில் இந்திய வெளியுறவுச் செயலரின் வருகையைத் தொடர்ந்து இந்த சிந்தனை வலுவடைந்துள்ளது.

அன்னை இந்திராவின் மறைவின் பின்னர் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஜே.ஆரின் இராஜதந்திர முதிர்ச்சியின்மை, ஜே.ஆரிடம் விலை போன இந்தியாவின் இராஜதந்திரிகள் என்ற சூழ்நிலையில் அப்போதிருந்த தனது பிராந்திய நலன்களுக்கு ஏற்ப இலங்கைக்கு சார்பாக உருவாக்கப்பட்டதே இலங்கை – இந்திய ஒப்பந்தம்.

தனது நலன்கள் பூர்த்தியானதும் தனது நண்பனாக மாறிவிட்டிருந்த இலங்கையின் இனவாத அபிலாசைகளை அதிகம் பாதிக்காத வகையில் தனது நலன்களுக்காகதான் ஆதரித்த ஈழத் தமிழரது போராட்டத்தை ஒடுக்க வேண்டிய N வை இந்தியாவுக்கு ஏற்பட்டபோது உருவாக்கப்பட்டதே இலங்கையின் அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தச் சட்டம்.

இந்த அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின்போது இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பங்காளியான இந்தியா அதன் ஒரு அலகான இலங்கையின் அரசியல்யாப்புச் சீர்திருத்தம் தொடர்பாக எந்தவித கவனமும் செலுத்தவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக செய்துகொண்டதே இலங்கை, இந்திய ஒப்பந்தம் என வெளியுலகிற்குக் கூறிவந்த இந்திய அரசு, அதன் முக்கிய பகுதியாக இருந்திருக்க வேண்டிய இலங்கையின் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பில் எந்த ஈடுபாட்டையும் காட்டாதது மட்டுமன்றி, இனவழிப்புக்குள்ளான ஒரு இனத்தின் பாதுகாப்புத் தொடர்பில் 13 ஆம் திருத்தத்தின் போதாமைகள் பற்றி தனது நேச சக்தியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் எழுப்பப்பட்ட கரிசனைகள் பற்றியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்திய அரசின் வாக்குறுதிகளை நம்பி மாகாண சபை அரசியலில் நுழைந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். மாகாணசபையில் எந்த அதிகாரமும் இல்லை எனச் சொல்லும் நிலை அப்போதே ஏற்பட்டிருந்தது. ஆனாலும், அந்தக் காலத்தில் கூட இந்திய அரசு 13ஆவது திருத்தத்தை வலுப்படுத்தும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.

அதுமட்டுமல்லாது, கடந்த 34 வருடங்களில், 13 ஆவது திருத்தம் படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டு வந்து அதில் இருந்த ஒரு சில தமிழர்களுக்கு சாதகமான விடயங்களும் படிப்படியாக நீக்கப்பட்டு வந்தபோதும் இந்திய அரசு ஒருபோதும் அதற்கு எதிராக சிறு எதிர்ப்பையேனும் தெரிவிக்கவில்லை.

13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசு பலவீனப்படுத்தியபோது மட்டுமல்லாது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு மாறாக இந்திய நலன்களுக்கு எதிரான சக்திகளுக்கு பிராந்தியத்தை திறப்பதில் இலங்கை ஈடுபட்டபோது கூட இலங்கைக்கு எதிராக இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கை தொடர்பான இந்திய இராஜதந்திரம் எப்போதும் பலவீனமானதே. அன்னை இந்திராவின் இறுதி இரண்டு வருடங்கள் தவிர இந்தியா எப்போதும் இலங்கைக்கு சாதகமாக அல்லது பாதகமில்லாத வகையிலேயே நடந்துகொண்டது.

மலையகத் தமிழர்கள் இந்திய வம்சாவளியினராக இருந்தும் அவர்கள் தொடர்பான விடயங்களில் கூட இந்தியா அவர்களுக்கு பாதகமாக இலங்கை அரசுக்குச் சாதகமாகவே எப்போதும் நடந்து கொண்டது. குறிப்பாக நேருவின் காலத்தின் பின் இதுவே தொடர்கதையாக இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை இந்தியாவின் நலன்களுக்கு எதிராக தீவிரமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும்போதும் இந்தியா இலங்கைக்கு எதிராக எதையும் செய்யாததுடன், சர்வதேச அரங்குகளில் இலங்கையை பிணையெடுக்கும் சக்திகளில் ஒன்றாக சீனா, ரஸ்யாவுடன் ஒருங்கேதான் நிற்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களிடம் வரலாற்று ரீதியாக உள்ள இந்திய வெறுப்பையோ, தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களிடம் உள்ள என்றும் மாறாத இந்திய நேசத்தையோ இந்திய அரசு கரிசனையில் கொண்டதில்லை. முழு இலங்கையையும் தனது நலனுக்கேற்ற தோழமையாகக் கொள்ள வேண்டுமென்றால் சிங்களவர்களை அதிருப்திக்குள்ளாக்கக் கூடாது என்ற தந்திரோபாயம் காரணமாகவே இந்தியாவால் இன்றுவரை இலங்கை தொடர்பாக ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

இந்தத் தவறான நிலைப்பாடே 1987 இல் இந்தியா தனது நிரந்தர நட்பு சக்திகளாக இருந்திருக்கக்கூடிய ஈழத்தமிழர்கள் இலங்கையின் மத்திய ஆட்சியில் வெளியுறவு உட்பட கூட்டு முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரத்தை வழங்கும் ஒரு சமஸ்டி முறைமையை முன்மொழிய முடியாமல் போனமைக்கு காரணமாகும்.

2010 இன் பின்னான இலங்கையின் சீனச்சார்பு போக்கு அதிகரித்து வருகின்ற போதும் கூட கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா விரும்பினாலும் இந்தியாவிற்கு தரமுடியாது என்று இலங்கை கூறினாலும் இந்தியாவால் ஆகக் கூடியதாக இலங்கையை (ஈழத்தமிழர்களாலேயே நிராகரிக்கப்பட்ட) 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவேன் என்ற பலவீனமான நிலையிலேயே இந்தியா உள்ளது. இதுவரை தமிழின இனவழிப்பு என்ற பதத்ததைத்தானும் இந்திய அரசு தூக்கியதில்லை.

இந்நிலையில், ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எம்மீதான இலங்கை அரசுகளின் இனவழிப்புக்கு எதிராக எவ்வகையிலும் உதவாத 13 ஆம் திருத்தத்தை முற்றாக அமுல்படுத்துவது இந்தியாவின் கடமை என்று இந்திய அரசிடம் கேட்க வேண்டியதில்லை.

13ம் திருத்தத்தின் முழுமையான அமுல்படுத்தல் என்பது இந்திய அரசின் சர்வதேச கடப்பாடு மட்டுமன்றி, தான் ஒரு பிராந்திய வல்லரசு என்ற கௌரவத்தைப்பேணுவதற்கும் தேவையானது. அதை முடிவு செய்ய வேண்டியது இந்திய அரசே அன்றி இந்தியாவின் நலன்களுக்கு மட்டுமே தேவையான ஒன்றை நாம் இந்திய அரசிடம் கோரிக்கையாக முன்வைக்க வேண்டியதில்லை.

ஈழத்தமிழர் இன்று இந்தியாவிடம் கூற வேண்டியது ஒன்று தான் ஈழத் தமிழர் இந்தியாவின் நண்பர்கள். ஏனெனில், அவர்கள் தமிழகத் தமிழர்களின் இரத்த உறவுகள்.

ஈழத்தமிழர்கள் இந்த நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் பலமானவர்களாக இருந்தால், அரசியலில் சிங்களவர்களுடன் சம பங்காளிகளாக இருந்தால் அவர்கள் இந்திய நலன்களுக்கு எதிராக சிங்கள தலைவர்கள் செல்வதைத்தடுப்பார்கள்.

அதேவேளை, இனவழிப்பிலிருந்து ஈழத் தமிழர்கள் பாதுகாப்பை பெறுவதற்கு ஈழத் தமிழர்களுக்கு அவர்களது தாயகத்தில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு அரசியல் தீர்வே தேவை.

ஈழத் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் நலன்கள் இந்த ஒரு புள்ளியில் சங்கமிக்கின்றது என்பதையே நாம் இன்று இந்திய அரசுக்குச் சொல்ல வேண்டும்.

நாம் இந்தியாவுக்கு மட்டுமல்லாது உலகிற்கே சொல்ல வேண்டியது தமிழர்கள் ஒரு தேசமென்ற அடிப்படையில் அவர்களுக்கு எதிராக சிங்கள அரசு காலங்காலமாக இனவழிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்ற அடிப்பi யில் அவற்றுக்கு தீர்வாக அமையக் கூடிய ஒரு தீர்வையே தமிழ் மக்கள் நாடி நிற்கின்றார்கள்.

இதுதான் தமிழர்களின் தேவையென்பதை நிரூபிக்கவேண்டுமாயின் அது தொடர்பாக ஈழத்தமிழ் மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த இந்தியாவும் சர்வதே சமூகம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையே நீங்கள் முன்வைக்க வேண்டும் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply