மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை தகாத உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று சனிக்கிழமை உத்தரவிட்டார்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நண்பன் ஒருவரின் வீட்டுக்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் சென்று வந்துள்ள நிலையில் சம்பவ தினமான கடந்த 3ம் திகதி இரவு குறித்த நண்பனின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் அங்கு கதைத்துக் கொண்டிருந்துள்ளார்.
அதேவேளை, குறித்த நண்பன் இன்னொரு நண்பனுடன் மது அருந்திவிட்டு, அவருடன் வீட்டின் வெளியில் படுத்துறங்கியதுடன், குறித்த இளைஞன் வீட்டின் மண்டபத்தில் உறங்கியதாக கூறப்படுகிறது.
இதன்போது நண்பனின் மனைவி அறையில் கதவை பூட்டாது தனிமையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் நண்பனின் மனைவி உறங்கி கொண்டிருந்த அறைக்குச் சென்ற இளைஞன், அவரை எழுப்பி தன்னுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபடவருமாறு அழைத்துள்ளார்.
அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவரின் முகத்தில் கையால் தாக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் கணவர் மதுபேதையில் நித்திரையில் இருப்பதால் நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவிக்காமல் இருந்துள்ள மனைவி, காலையில் நித்திரையில் இருந்து எழுந்த கணவர் மனைவியின் முகத்தில் உள்ள வீக்கத்தை கண்டு வினாவியபோது மனைவி நடந்தவற்றை தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த இளைஞனை நேற்று சனிக்கிழமை கைது செய்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 15 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
பிற செய்திகள்