ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கோ, அதில் இருக்கும் நபருக்கோ, அணிக்கோ அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளை நீக்கும் உரிமையில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் என்பது என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கம் என்பது கூட்டணி அரசாங்கம். கூட்டணி அரசாங்கத்தில் கூட்டணிக் கட்சியினருக்கு இடையில் வௌ;வேறான நிலைப்பாடுகள் இருப்பது சாதாரணமானது.
தற்போதைய அரசாங்கம் நாங்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய அரசாங்கம். அவ்வாறு உருவாக்கிய அரசாங்கத்தில் இருந்தவாறு எமது நிலைப்பாடுகளை கூற உரிமையில்லை என்று கூறுவார்கள் எனில், அதனை தீர்மானிப்பது நீதிமன்றத்தில் அல்ல, அரசியல் ரீதியாகவே தீர்மானிக்க வேண்டும்.
யார் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இவர்களே எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக எமது கூட்டணிக் கட்சியின் தலைவர் ஒருவருக்கு எதிராக முதலில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தனர். ஒரே அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு இதனை எப்படி செய்ய முடியும்.
தற்போது இந்த பிரச்சினையை பெரிதாக எடுத்துக்கொண்டுள்ளனர். இது அரசாங்கத்திற்குள் பேசி தீர்த்துக்கொள்ள முடியாத பிரச்சினை என்று கூறுமளவுக்கு சிலர் மோசமானவர்களாக மாறியுள்ளனர்.
அப்படியானால், இவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். அவர்களால் தனித்து தீர்மானங்களை எடுக்க முடியாது. அனைவரும் இணைந்தே அரசாங்கத்தை உருவாக்கினோம். அப்படியானால், அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஒருவரால் எப்படி தீர்மானங்களை எடுக்க முடியும்.
தீர்மானங்களை எடுக்க வேண்டுமாயின் நாங்கள் அனைவரும் இணைந்து எடுக்க வேண்டும். அதனை விடுத்து தனிக் கட்சியால் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






