இழுவைப் படகுகளை நிறுத்துமாறு நாங்கள் மட்டும் கூறவில்லை, இந்திய மீனவர்கள் கூட இந்த இழுவைப் படகுகளை தடை செய்யுமாறு தான் கூறுகின்றார்கள் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் பற்றி, இலங்கைக்கான இந்திய தூதுவருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளமை,
கடந்த சில தினங்களுக்கு முன்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய தூதுவருடன் மீனவர்களது பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறி, எம்மை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்தனர். அதனடிப்படையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்திய மீனவர்களது இழுவைப் படகுகள் எங்களது கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு எமது மீனவர்களது உடமைகளை சேதப்படுத்துகின்றனர்.
இந்த இழுவைப் படகுகளை நிறுத்துமாறு நாங்கள் மட்டும் கூறவில்லை, இந்திய மீனவர்கள் கூட இந்த இழுவைப் படகுகளை தடை செய்யுமாறு தான் கூறுகின்றார்கள் என சுட்டிக்காட்டிய வேளை, அதற்கு பதிலளித்த இந்திய தூதுவர்,
உங்களுக்கு ஏற்பட்ட கஸ்டங்களையும், சிரமங்களையும் எண்ணி வருந்துகிறேன். இது தொடர்பாக மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் கலந்துரையாடி என்னால் முடிந்த அளவு அழுத்தத்தைத் கொடுத்து இதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முயல்வேன்.
அத்துடன், உங்களது இழப்புக்களை முழுமையாக ஈடுசெய்ய முடியாவிட்டாலும் பகுதியளவில் ஈடுசெய்வதற்கு ஏற்ற இழப்பீடுகளை இந்தி அரசிடமிருந்து பெற்றுக்கொடுப்பேன் என அவர் தெரிவித்ததாக என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.






