பிரதேச செயலாளரின் அலுவலகம், விடுதி அனுமதியின்றிய சோதனை நடவடிக்கையை எதிர்த்து போராட்டம்

முல்லை, ஓக 8

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தின் அலுவலகமும், உத்தியோக பூர்வ விடுதியும் முறையான அனுமதியின்றி பொலிஸாரால் சோதனை இடப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள காணி உத்தியோகத்தர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள்,மற்றும் காணி வெளிக்கள போதனாசிரியர்கள் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த தொழிற்சங்கத்தின் தலைவர் க.சிவகுமார் மற்றும் செயலாளர் க.வசந்தன் ஆகியோரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தின் அலுவலகமும், உத்தியோக பூர்வ விடுதியும் முறையான அனுமதியின்றி சோதனை என்னும் பெயரில் அலுவலக தேவைக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருள்களை எடுத்துச்சென்ற புதுக்குடியிருப்பு பொறுப்பதிகாரி, எம்.பி.ஆர்.ஹேரத்தின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அத்துடன் பொலிஸாரின் முறையற்ற அத்துமீறிய செயற்பாடு தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கமாறு உரிய தரப்பினரை கோருகின்றோம்.  இதுதொடர்பாக வடமாகாண நிருவாக சேவை சங்கத்தினரால் இன்று (08.08) முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு தொழிற்சங்க நடவடிக்கைக்கு எமது தொழிற்சங்கமும் பூரண ஆதரவினை வழங்குவதோடு ஏனைய தொழிற்சங்கங்களையும் ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *