பட்டினியால் உயிரிழக்கும் நிலை; காசு தருகிறோம் எரிபொருள் தாருங்கள்! – இந்திய தூதுவரிடம் யாழ். கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

நாங்கள் உங்களிடம் நிவாரணம் கேட்கவில்லை, உதவி கேட்கவில்லை, எரிபொருள், மண்ணெண்ணெய் தந்தால் போதும். எங்களுக்கு இலவசமாக எரிபொருள் வேண்டாம், இலங்கை ரூபாவிலே காசு தருகிறோம் எங்களுக்கு தேவையான மண்ணெண்ணையினை இந்தியாவில் இருந்து மிக விரைவாக இறக்குமதி செய்து பெற்றுத்தந்து பட்டினியில் இருந்து காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசனங்களின் சம்மேளத் தலைவர் அன்னாராசா தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

யாழ்.மாவட்டத்தை பொருத்தளவிலே 23 ஆயிரம் கடற்தொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அதனைத் தங்கி வாழுகின்ற 30 ஆயிரம் மக்கள், அண்ணளவாக 1 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது.

அந்த பாதிப்பானது கடற்தொழில் சமூகத்தை பட்டினியால் உயிரிழக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

யாழ்.மாவட்டத்தில் 60 நாட்களுக்கு மேற்பட்டு எங்களுக்கு எரிபொருள், மண்ணெண்ணெய் இன்றுவரை கிடைக்கவில்லை, இதனால் 100 சதவீதமான மக்கள் கடலுக்கு செல்லவில்லை.

நாளை கிடைக்கும், நாளைமறுதினம் கிடைக்கும் என ஏக்கத்தோடு இருந்து 60 நாட்களை கடந்து விட்டோம். மாணவர்கள் உணவு உண்ணாது பாடசாலைக்கு செல்கின்ற நிலை கரையோர பகுதியிலே கடற்தொழிலார்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.

கடந்த வாரம் 6600 லீற்றர் மண்ணெண்ணெய் மட்டும் தான் யாழ்.மாவட்ட கடற்தொழிலார்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதனை 6 கடற்தொழில் சங்கங்களுக்கு பகிர்ந்தளித்திருக்கின்றோம்.

ஏனைய 100க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு எரிபொருள் இன்மையினால் அவர்கள் தொழிலை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, மாணவர்கள் படிக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு இலங்கை ஜனாதிபதியும், எரிசக்தி அமைச்சர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோர் விரைந்து கடற்தொழில் சமூகத்துக்கு உரிய மண்ணெண்ணையினை மிக விரைவாக வழங்க வேண்டும். இல்லையேல் இந்த 60 நாட்கள் போன்று கடந்தால் எங்களுடைய சமூகம் பட்டினியால் உயிரிழந்த பின்பு நடவடிக்கை எடுத்தாலும் அது பிரியோசனம் இல்லது போய்விடும்.

மீனவர் சமூகம் கொந்தளிப்புடன் வீதியில் இறங்க தயாராக உள்ளது. நாடு இருக்கும் நிலைக்கு நாங்கள் போராட விரும்பவில்லை, நாங்கள் சாப்பிட்டால் தான் போராட முடியும்.

நல்லூர் ஆலயம் உற்சவம் ஆரம்பித்து இருப்பதால் மீன் உண்ணுபவர்களின் தேவை குறைந்திருக்கின்றது. இதனால் எங்களது பாதிப்பு வெளியில் வரவில்லை.

நாங்கள் உங்களிடம் நிவாரணம் கேட்கவில்லை, உதவி கேட்கவில்லை, எரிபொருள், மண்ணெண்ணெய் தந்தால் போதும். எங்களுக்கு இலவசமாக எரிபொருள் வேண்டாம், காசுக்கு தருவதற்கு இந்த நாடும், அரசாங்கமும் நவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்திய இராமேஸ்வரம், புதுச்சேரியைச் சேர்ந்த இழுவைப்படகுகள் பருத்தித்துறை, காங்கேசன்துறைக்கு அண்மித்த 11 கடல் மைலிலே நேற்றைய தினம் இரவு தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே எங்களது கடல் வளத்தை அழிக்கும் இந்த இழுவை மடித் தொழிலை செய்ய வேண்டாம்.

நாங்கள் பொருளாதார நெருக்கடியிலே பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றோம், எங்களது கடல் பகுதியில் சுதந்திரமாக தொழில் புரிய அனுமதியளிக்க வேண்டும்.

யாழ் ,மாவட்ட கடற்தொழில் சமூகம் சார்பாக எங்களுக்கு தேவையான மண்ணெண்ணையினை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து தருமாறும், வடக்கு கடற்தொழிலார்கள் மீது கருணை காட்டியும் மிக விரைவில் பெற்றுத்தந்து பட்டினியில் இருந்து காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என இலங்கைக்கான யாழ்ப்பாண இந்திய தூதுவர், இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆகியோரை கேட்டுக்கொள்கின்றோம். இலங்கை ரூபாவிலே காசு தருகிறோம் மண்ணெண்ணையை பெற்று தர வேண்டும்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *