இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்ததாக கூறப்படும் மீனவர் ராஜ்கிரனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது மனைவி பிருந்தா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் இன்று மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடி விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகியோர் இலங்கைக் கடற்பரப்பிற்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இலங்கை கடற்படையினர், அவர்களை கைது செய்ய முற்பட்ட போது, விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கியது.
படகில் இருந்த சுகந்தன் மற்றும் இருவரையும் உயிருடன் மீட்ட இலங்கை கடற்படையினர் ராஜ்கிரனை தேடியுள்ளனர். எனினும் உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டது.
பின்னர் ராஜ்கிரனின் உடல் இந்திய தூதரகத்தின் மூலம் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராஜ்கிரண் உடலை பார்க்க வேண்டும் என உறவினர்கள் கேட்டனர். ஆனால், உடல் கடலில் இருந்து எடுக்கபட்டதால் உடல் மிகவும் மோசமாக உள்ளது. எனவே உடலை பெட்டியில் இருந்து திறந்து காட்ட முடியாது என அரசு அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இன்று மீனவர் ராஜ்கிரனின்; மனைவி பிருந்தா மற்றும் சமூக அமைப்புகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்த தனது கணவர் உடலை தன்னிடம் காண்பிக்காமல் புதைத்துவிட்டனர்.
எனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது எனவே புதைத்த உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என மனு அளித்தார்.
இது குறித்து சர்வதேச ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிருந்தா,
‘எனது கணவரின் உடலை என்னிடம் காண்பிக்கவில்லை. அது எனது கணவரின் உடல்தானா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. எனவே, புதைத்த உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
எனது கணவரை கடலில் இருந்து மீட்டதாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள புகைப்படத்தில் எனது கணவரை இலங்கை கடற்படையினர் அடித்து துன்புறுத்தி துப்பாக்கியால் சுட்டதைப் போல் இருந்தது. கடலில் மூழ்கி இறந்தவர்கள் படம் இது போல் இருக்காது’ என்றார்.






