கச்சதீவானது தமிழ்கத்துக்கானதாக இருந்தால் மீனவ பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதனை கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு திராவிட முன்னேற்றக்கழக தொழிற்சங்கத் தலைவர் கண்ணதாசன் தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கடந்த 7 ஆம் திகதி தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் 10 ஆவது தேசிய கழகத்தின் மாநாட்டிலே அவர்கள் கேட்டதிற்கு இணங்க கலந்துகொண்டிருந்தேன். தமிழக முதலமைச்சர் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்கி இருந்தார், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான தீர்மானத்தை எடுத்துச் செல்ல வேண்டுமென குறிப்பிட்டதால் இந்த மாநாட்டிலே கலந்து கொண்டிருந்தேன்.
மீனவ சமூகத்தின் பிரச்சனைகள் இல்லாது போவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துகொண்டிருக்கிறோம். அதற்கான ஒரு தனியான அமைச்சரவை தமிழக அரசு வைத்திருக்கின்றது.
எப்பொழுதெல்லம் பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அந்த சமயத்தில் அதில் தலையிட்டு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தி.மு.க அரசாங்கம் நடவடிக்கைகளை செய்துகொண்டிருக்கிறோம்.
மீனவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்ற பொழுதெல்லாம் உதவி செய்திருக்கிறோம், தற்போது மீனவர்களுடைய பிரச்சனை தீர்க்க வேண்டும், இது நீண்டகாலமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.
எனவே கச்சதீவினை மீட்டு மீனவ பிரச்சனை தீர்க்கப்பட வழி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதனை வலிறுத்தி அங்கிருக்கின்ற தமிழ் அமைப்புக்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே மீனவர்களின் நீண்ட கால பிரச்சனைகளை இரண்டு நாடுகளும் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என நம்புகிறோம்.
உண்மை நிலையினை அறிந்து நாம் கச்சதீவினை மீண்டும் கேட்கிறோம், அந்தவகையில் கச்சதீவானது தமிழ்கத்துக்கானதாக இருந்தால் மீனவ பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதனை கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். தி.மு.க இன் தேர்தல் முடிவிலே அதனை பெற்றுத்தருவதாகவும் கூறியிருக்கிறோம். என்றார்.
பிற செய்திகள்