கோட்டா மீண்டும் நாட்டுக்கு வருகை தருவது நல்லதல்ல! பாதுகாப்புத் தரப்பு

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமை காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான செயற்பாடாக அமையாது என்று பாதுகாப்புத் தரப்பு அரசுக்கு அறிவித்துள்ளது என்று உள்ளகத் தகவல்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னிலை உறுப்பினர் ஒருவர் இவ்வாறான தகவல் கிடைத்துள்ளது என்று குறித்த சிங்கள ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பதற்கு வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த தினத்தில் அல்லது அதற்கு முன்னதாக அவர் நாட்டுக்கு வருகை தரவேண்டியுள்ள நிலையில் அது குறித்து தான் உறுதியாக அறிந்திருக்கவில்லை என்று குறித்த ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னிலை உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் உரிய வீசா காலத்துக்கு மேலதிகமாக தங்கியிருப்பது தமது நாட்டுக்குப் பாதுகாப்புப் பிரச்சினையை உருவாக்கும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும் குறித்த முன்னிலை உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போதைய நிலைமையின் கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *