இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை முன்பாகவும், மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயம், சேனையூர் மத்திய கல்லூரிகளின் முன்பாகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், வவுனியாவிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதையடுத்து, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது,
ஜனநாயக ரீதியாக உரிமைக்காக போராடிய எமது பொதுச்செயலாளர் முறையற்ற விதத்திலே கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் இந்த அரசு அவசரகாலச்சட்டத்தினை பயன்படுத்தி ஜனநாயக போராளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
எனவே இந்தச்சட்டத்தினை உடனடியாக நீக்கி நாட்டில் ஜனநாயக தன்மையை உறுதி செய்ய வேண்டும். தேவையற்ற கைதுகளை தவிர்த்து நாட்டின் பொருளாதாரத்தை முன்நகர்த்த ரணில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பாடசாலைகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், ஜனநாயக உரிமைகளை கொச்சைப்படுத்தாதே, கல்வியின் குரலை நசுக்காதே, கொள்ளை அடித்தோர் உல்லாசம், உரிமைக்கு குரல் கொடுத்தோர் சிறைவாசம் போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் தாங்கியிருந்ததனர்.







பிற செய்திகள்