மக்களின் காணிகளை கையளிப்பதுடன், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணி வெடி அகற்ற்பட்ட காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்
மேலும், இங்கு பாடசாலைகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் செல்வதை கண்டேன். தெற்கு பகுதியில் மாணவர்களுக்கு, பாடசாலைக்கு செல்லும்போது சில அறிவுறுத்தல்கள் பதாதைகள் ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றது.
ஆனால், இங்கு அவ்வாறான நிலை இல்லை. அது மிகவும் சந்தோசமான விடயமாக உள்ளது. அதேபோன்று, இங்கு விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபடுவதனையும் அவதானித்தேன். சுபீட்சத்தை நோக்கி எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இங்குள்ள விவசாயிகள் பெரும் பங்காற்றுகின்றனர்.
தைரியமான மனிதர்கள் யார் என்றால் இங்குள்ளவர்களையே நான் அழைத்து வந்து காண்பிக்க வேண்டும். தைரியமுள்ள மனிதர்கள் இங்குதான் உள்ளனர்.
இங்கிலாந்து, சுவீடன், நோர்வே உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து இங்கு புதைக்கப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய சுபீட்சத்தை நோக்கிய இலங்கை என்ற தொனிப்பொருளில் மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடு;கக்பட்டுள்ளது.
மக்களின் காணிகளை கையளிப்பதுடன் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம்.
மிக குறைந்த அளவிலான கண்ணிவெடி அகற்றும் பணிகளே இங்கு காணப்படுகின்றது. பெரும்பாலான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. இவ்வருட வரவு – செலவு திட்டத்தில் இந்த விடயமும் உள்ளடக்கப்படும்.
அதனூடாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் அபிவிருத்திக்கான பணம் அதிகளவில் பெற்றுக்கொள்ளமுடியும்.
மிக குறுகிய காலத்திற்குள் மிகுதியாக காணப்படுகின்ற பகுதிகளிலிருந்தும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு மக்களிடம் விரைவில் காணிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.






