
பழைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், ஒக்டோபர் 31 ஆம் திகதியின் பின்னர் உள்ளூராட்சி தேர்தலுக்கான தினத்தை நியமிக்குமாறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று திங்கட்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே அரசியல் கட்சிகளால் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில்,
தேர்தல் முறைமை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது. சில மாகாணசபைகள் கலைக்கப்பட்டு சுமார் 5 வருடங்கள் கடந்துள்ளன.
பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் பழைய முறைமையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக்குழுவும் மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதே போன்று செப்டெம்பர் மாதத்திலிருந்து உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு காணப்படுகிறது.
எனவே இவ்விரு தேர்தல்களையும் துரிதமாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எமது கோரிக்கை தொடர்பில் அரசாங்கமும் தேர்தல் ஆணைக்குழுவுமே இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.
ஜே.வி.பி. சார்பில் சந்திப்பில் கலந்து கொண்ட சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவிக்கையில்,
பழைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரைத்துள்ளது. உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு செப்டெம்பரின் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கிடைக்கப் பெறும் என்பதால், ஒக்டோபர் 31 க்கு பின்னர் தேர்தலுக்கான தினத்தை குறிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
எனவே வெகுவிரைவில் உள்ளுராட்சி தேர்தல் இடம்பெறும் என்றும், ஒக்டோபர் 31 க்கு பின்னர் அதற்கான தினத்தை ஆணைக்குழு நியமிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
பொதுத் தேர்தல் குறித்த நிலைப்பாடு பாராளுமன்றத்தினால் தெரிவிக்கப்பட வேண்டும். அல்லது 2023 பெப்ரவரி மாதத்தின் பின்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது. உள்ளுராட்சி தேர்தல் அதிகாரம் மாத்திரமே ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெறும் என்றார்.
பிற செய்திகள்