அனுமதிப்பத்திரம் இன்றி முதிரை மரம் ஏற்றி வந்த வாகனம் விபத்து: ஒருவர் படுகாயம்!

அனுமதிப்பத்திரம் இன்றி முதிரை மரம் ஏற்றி வந்த மகேந்திரா வாகனம் ஒன்று இன்றையதினம் சித்தங்கேணி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பொறியியலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திய வாகன சாரதி வாகனத்துடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மரத்திற்கு அனுமதிப்பத்திரம் இல்லை என்று தெரிந்த பின்னர் சாரதியை தப்பிக்க வைப்பதற்காக, ஏற்றிவரப்பட்ட முதிரை மரங்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞனின் உறவினர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு எதேச்சையாக செல்லும்போது இவ்வாறு மரங்கள் வேறு வாகனத்தில் ஏற்றுவதை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

மரங்களை இடம்மாற்றும் இந்த செயற்பாடு வட்டுக்கோட்டை பொலிஸாரின் உடந்தையிலேயே இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடு பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *