அமெரிக்க – சீன மோதல்; இலங்கைக்கு  பாதிப்பு

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய மோதல் நிலைமை மேலும் தீவிரமடைந்தால் இலங்கை போன்ற வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பவித்ரா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், சர்வதேச நிதியங்களைப் பெறும் இலங்கையின் திறன் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச உதவிகள் தேவைப்படுகின்றன.

இந்த நிலையில் உலகின் பலமான இரண்டு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகள் ஏதாவது ஒரு நாட்டின் பக்கம் இணைய நேரிடும். ஆனால் யாருடன் இணைவது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடும்.

இரண்டு பக்கமும் இணையாமல் செயற்படாலம் என நினைத்தால் அது முடியாத ஒரு காரியம். இலங்கையால் வெளிநாடுகளின் உதவியின்றி மீண்டு வருவதென்பது இலகுவான விடயமல்ல.

ரஷ்யா – உக்ரைன் போரிலும் ஒரு பக்கம் ஆதாரவாக நின்றதால் பல நாடுகள் எரிபொருள் பெற முடியாமல் தவித்து வருகின்றன. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், இலங்கையில் விநியோக வலையமைப்பு உள்ளிட்ட பல துறைகள் கடுமையாக பாதிக்கப்படலாம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *