புத்தளத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு; விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை!

புத்தளம் – ரத்மல்யாய , முல்லை ஸ்கீம் கிராமத்தில் இரண்டு வீடுகள் உடைக்கப்பட்டு, தங்க நகைகள், பணம் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முல்லை ஸ்கீம் கிராமத்தில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த திருடன் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, ரயிஸ் குக்கர், தங்க நகைகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றையும் திருடிச் சென்றுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸில்  முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன், அதே கிராமத்தில் இன்று பிற்பகல் மற்றுமொரு வீடொன்றிலும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த வீட்டின் சமயலறை ஜன்னல் ஊடாக வீட்டுக்குள் சென்ற திருடன் வீட்டின் அறையில் உள்ள அலுமாரியில் வைக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையும் ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக அந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேற்படி இரண்டு வீடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களிலும் ஒரே நபர் தொடர்பு பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இரண்டு வீடுகளிலும் பகல் வேளைகளில் இவ்வாறு தங்க நகைகள், பணம் உட்பட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், முதலாவது வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவர் தற்போது தலைமறைவாகி இருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

போதைப்பாவனைக்கு அடிமையான தனிநபர் ஒருவரே மேற்படி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்தோடு, அறிமுகமில்லாத நபர்கள் எவரும் கிராப்புறங்களில் நடமாடுவதை அவதானித்தால் அவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவில் தங்க நகைகள், பணம், தண்ணீர் மோட்டர் , சமையல் எரிவாயு உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்த புத்தளம் பொலிஸார், சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

புத்தளம் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ருவன் சுரங்க உடுகும்புரவின் ஆலோசனையில், குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜீவன் குமார தலைமையிலான பொலிஸ் குழு மேற்படி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *