அதிகரிக்கப்பட்டது மின் கட்டணம்: அலகுகளின் முழுமையான விலை விபரம்

கொழும்பு, ஓக 10

இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, இலங்கை மின்சார சபைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியிருந்தது.

8 வருடங்களின் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் 78 இலட்சம் வாடிக்கையாளர்கள், மின்சாரத்தை பெறுகின்றனர். அவர்களில் 67 இலட்சம் பேர் வீட்டுப்பாவணைக்காகவும், ஏனைய 11 லட்சம் பேர் வர்த்தகம் உள்ளிட்ட பொது செயற்பாடுகளுக்காகவும் மின்சாரத்தை பெறுகின்றனர்.

வீட்டுப் பாவனைக்காக மாதாந்தம் மின்சாரத்தை பெறுவோரில் 48 லட்சம் பேர், 90 அலகுகளுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்துவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், திருத்தப்பட்டுள்ள மின் கட்டணத்துக்கு அமைய, 1 முதல் 30 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 2 ரூபா 50 சதமாக காணப்பட்ட கட்டணம், 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும், 61 முதல் 90 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 7 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

91 முதல் 180 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 27 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 50 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 30 அலகுகளுக்கும் குறைவான பாவனையைக் கொண்ட பிரிவினருக்கு மொத்த செலவில் 25 சதவீதம் அறவிடப்படுவதாகவும், அவர்களுக்கு இன்னும் 75 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

31 முதல் 60 அலகுகளுக்கு உட்பட்ட பாவனையாளர்களுக்கு, மொத்த செலவில் 40 சதவீதம் அறவிடப்படுகிறது. அவர்களுக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

61 முதல் 90 அலகுகளுக்கு உட்பட்ட பாவனையாளர்களுக்கு, 50 சதவீத கட்டணம் மட்டுமே அறவிடப்படுகிறது.

அந்த வகையில் 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. அதன்படி, 75 சதவீத மின்சார பாவனையாளர்களுக்கு இன்னும் மானியம் வழங்கப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், புதிய மின் கட்டண அதிகரிப்பை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டணமானது, பொதுமக்கள் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில் அதிகரிக்கப்பட வேண்டும். சமையல் எரிவாயுவின் விலையை 246 ரூபாவால் குறைத்து, மின் கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிக்கின்றனர்.

8 வருடங்களாக மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் அதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். அதனைவிடுத்து, மக்கள் மீது சுமைகளை ஏற்படுத்துவது சிறந்த விடயம் அல்ல என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *