
சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் வேகத்தை அதிகரித்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணம்!
கப்பல் நாளை (11) ஹம்பாந்தோட்டையை வந்தடையவுள்ளது.
செய்மதிகள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்க முடியுமான வசதிகள் கொண்ட சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கையிலிருந்து 680 கடல் மைல் தொலைவில் மணித்தியாலத்திற்கு 14 கடல் மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் இதற்கு முன்னர் இந்த கப்பல் மணித்தியாலத்திற்கு 10 முதல் 13 கடல் மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பயணிப்பதை தமது பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்து இந்தியா கடுமையாக எதிர்த்த நிலையில் இந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை வௌிவிவகார அமைச்சு சீனாவிற்கு அறிவித்திருந்தது.
இதேவேளை ஏவுகணை கண்காணிப்புகளை மேற்கொள்ள முடியுமான சீனாவின் உற்பத்தியான பாகிஸ்தானின் யுத்த கப்பல் ஒன்றும் 12 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
பாகிஸ்தானின் கப்பல் பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியிருந்த போதிலும் அனுமதி வழங்கப்படவில்லை.
சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் சீனாவின் உற்பத்தியான பாகிஸ்தானின் யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கும் ஒரே நேரத்தில் வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.