கடத்தல்களுக்கு ஒப்பான வகையில் மேற்கொள்ளப்படும் கைதுகள்! சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

கடத்தல்களுக்கு ஒப்பான வகையில் மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் தடுப்புகள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ்மா அதிபர் C. D. விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

சிவில் உடை அணிந்த மற்றும் அடையாள அட்டை இல்லாத பொலிஸ் அதிகாரிகள், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் அடையாளம் காண முடியாத வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு பல மணிநேரம் அடையாளம் தெரியாத இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டதற்கான ரசீதுகள் வழங்கப்படவில்லை அல்லது கைது செய்யப்பட்டவர்கள், இருக்கும் இடத்தை உறவினர்கள், நண்பர்கள் அல்லது சட்டத்தரணிகளுக்கு தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அந்தோனி வெரங்க புஷ்பிகா டி சில்வா என்பவர், சிவில் உடையில் இருந்தவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு ஆறு மணித்தியாலங்களாக அவர் இருந்த இடம் தெரியவில்லை.

இறுதியில் அவர் சட்டத்தரணிகளால் பொலிஸ் காவலில் அவர் இருப்பது கண்டறிப்பப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் மங்கள மத்துமகே என்பவர், சிவில் உடையில் இருந்த இருவரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் சில மணித்தியாலங்களின் பின்னரே அவர் இருந்த இடம் தெரியவந்துள்ளது.

மூன்றாவது சந்தர்ப்பத்தில், களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கடத்தப்பட்டு, விடுவிக்கப்படுவதற்கு முன்னர் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்களுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு, அறிவிக்கப்படாமையால் தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபர்கள் நீதிவான் இல்லத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ​​சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் அவர்களுக்கு இல்லாமல் போனது.

இந்த நிலையில் கைது செய்யப்படுவோர் தொடர்பில் உறவினர்களுக்கு தாமதமின்றி போதுமான அணுகல் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply