புத்தளம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் ஆடி விழா மகோற்சவத்தில் நேற்று புதன்கிழமை இரவு தீமிதிப்பு உற்சவம் இடம்பெற்றது.
கடந்த மாதம் 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த உற்சவம் தொடர்ந்து 18 தினங்கள் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று மாலை 6.00 மணியளவில் விஷேட வசந்த மண்டப பூஜை இடம் பெற்றது.
அதனையடுத்து, உற்சவ மூர்த்திகள், மங்கள வாத்தியம் முழங்க உள்வீதி மற்றும் வெளி வீதி வலம் வந்து ஆலயத்தின் முன்பகுதியில் தீமிதிப்பு இடம்பெறும் இடத்திற்கு முன்னால் அமர்த்தப்பட்டு பின்னர் அங்கிருந்து கரகம் உடப்பு ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயர் ஆலய பூசகர் குழந்தை வேல் சுரேந்திரனினால் மங்கள வாத்தியம் முழங்க உடப்பு பிரதான வீதியின் ஊடாக ஆண்டிமுனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் உடப்பு பிரதான வீதி ஊடாக மீண்டும் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்திற்கு முன்பாக வருகை தந்தது.
இதனையடுத்து, உடப்பு ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயர் ஆலய பூசகர் குழந்தை வேல் சுரேந்திரனினால் இரவு 8.55 க்கு கரகத்துடன் தீ மிதிப்பில் இறங்கி தீமிதிப்பு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனையடுத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீயில் இறங்கி தமது நேரத்திக் கடனை நிறைவேற்றினார்கள். இதன் போது சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தீயில் இறங்கினார்கள்.
இந்த தீமிதிப்பு உற்சவத்தை பார்வையிடுவதற்காக நாட்டின் பல இடங்களில் இருந்தும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
உடப்பு பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்