
கொழும்பு, ஓக 11
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழுவொன்றுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் பங்காளியாக தமது ஒன்றியம் தன்னை முன்னிறுத்துமென ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சிவில் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை மிகவும் அவசியமாகுமெனவும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கூட்டு நடவடிக்கை அவசியம் என்பதை ஒப்புக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வெளிவிவகாரங்கள் தொடர்பான விடயங்களில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்ததாக தெரிவித்துள்ளது.
இதன்படி, GSP+, சர்வதேச நாணய நிதியம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் செயல்முறைகளை வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தமது பதிவில் தெரிவித்துள்ளது.