அம்பாறை அறுகம்பை சுற்றுலா மையம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வீழ்ச்சியடைந்து தற்போது அதிலிருந்து மீண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இயற்கை எழில்மிகு பிரதேசங்கள் பலவற்றைக் கொண்ட எமது இலங்கைத் தேசமானது மன்னர்களின் ஆட்சி காலம் முதல் மக்களாட்சி காலம்வரை மக்களின் பொழுதுபோக்கு சொர்க்க புரியாகவே இருந்து வருகின்றது.

இங்கு இயற்கையாகவே கொண்டமைந்த துறைமுகங்கள், வனப் பிரதேசங்கள், வானைத் தொடும் மலை முகடுகள், அதிலிருந்து ஊற்றெடுக்கும் கங்கைகளுடன் பறவையினங்கள் போன்றவைகள் எல்லாம் அழகிற்கு அழகு சேர்ப்பனவாக உள்ளன. இதனால் தான் இலங்கை தீவு உல்லாசப் பயணிகளின் பயணப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதெனலாம்.

எமது நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகள் ஒரேயொரு முறையுடன் பயணத்தை நிறுத்திக் கொள்ளாது வருடா வருடம் தமது பயணத்தை மேற்கொள்கின்றனர். இதற்கு எமது நாட்டின் பூகோள அமைப்பே பிரதான காரணமாக அமைந்துள்ளது.
அதாவது 12 மணி நேரத்தில் சூடு, குளிர் மிதமான காலநிலையினை அனுபவிக்கக் கூடிய ஒரே ஒரு நாடாக உள்ளதே மூலகாரணம் என கூற முடியும்.

காலையில் அம்பாறை அறுகம்பை கடற்கரையில் கடலலை சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு விட்டு மதியம் நுவரெலியாவில் ஓய்வு எடுக்கக் கூடிய சூழ்நிலை இருப்பது எமது நாட்டிற்கு அதிக மதிப்பெண்ணாக உள்ளதெனலாம்.
முன்னர் யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட புராதன இடங்களுக்கு மட்டுமே சென்று வந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது அதிகளவில் கரையோரப் பிரதேசங்களின் எழில்மிகு அழகிய காட்சிகளை கண்டு அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இதன் மூலமாக அதிக நாட்கள் நாட்டில் தங்கியிருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாயிற்று. இதனால் எமது நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தில் கணிசமான அதிகரிப்பு தோன்றியுள்ளது.
எமது நாட்டில் உல்லாசப் பயணிகளை அதிகம் கவர்ந்திருக்கின்ற இடங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டம் அறுகம்பை முக்கிய இடத்தில் உள்ளது. இந்த அறுகம்பை ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்பிருந்தே அந்நியர்களின் சிறிய மீன்பிடித்துறைமுகமாகவும் பொழுதுபோக்கு இடமாகவும் இருந்துள்ளது.

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரசே செயலகப் பிரிவில் அறுகம்பே இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் இது மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.
1996ம் ஆண்டு இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம், அறுகம்பே, சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது.

அறுகம்பே இயற்கையினால் அழகு நிறைந்த பகுதியாகும். குறிப்பாக, இங்குள்ள கடற்கரை சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்புகிற ஒன்றாகும்.
“சர்பிங்” எனப்படும் கடலலைச் சறுக்கு விளையாட்டுக்கு, உலகளவில் மிகவும் சிறந்த இடங்களில் அறுகம்பேயும் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உலக நாடுகளில் இருந்து அறுகம்பே பகுதிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இதனால், தற்போது சுற்றுலாப் பயணிகளால் அறுகம்பே களைகட்டியுள்ளது.

ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, பின்லாந்து, ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து அறுகம்பே பகுதிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுநோய் எரிபொருள் நெருக்கடி காரணமாக அறுகம்பே பகுதிக்கு சிறிதளவு சுற்றுலாப் பயணிகள்தான் வருகை தந்திருந்தனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்காக இன்று அதிகரித்துள்ளது.

அறுகம்பேயில் தங்கும் விடுதிகள் உணவுச்சாலைகள் தற்போது உல்லாச பிரயாணிகளின் வருகையினால் புத்துயிர் பெற்று வருகின்றன.



பிற செய்திகள்