காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வாளை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்திருந்தனர். அத்துடன் வீடு ஒன்றிற்கும் இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக முறைப்பாடு கொடுக்க சென்றவரை காவல் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முறைப்பாடு இங்கு எடுப்பதில்லை என்று சொல்லும்படியாக யாழ் ,மாவட்டத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்து செயற்பட்ட ஒருவரின் செயற்பாட்டினால் முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்த ஒரு குழந்தையினை கொண்ட விதவைப்பெண் தனது வீட்டினை இழந்து நிற்கிறார் என காரைநகர் சிவில் சமூக செயற்பாட்டாளர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அந்த வீட்டினை எரித்தது என்பது அந்த பெண்ணை கொலை செய்ததிற்குச் சமம் இந்த கொடூரத்தை அவ்வூர் பிறந்த ஆதிக்க வெறி கொண்ட ஒரு ஜனநாயக விரோத சக்திகள் இந்த செயலினை செய்திருக்கிறது.
இந்த சக்திகள் ஏற்கனவே பொலிஸாரிடம் இனங்காட்டப்பட்டுள்ளன. போலீசார்,தமிழர் ஒரு அந்நியர்கள் போலவும் இந்த நாட்டு பிரஜைகள் இல்லாது போலவும் செயல்படுவதன் காரணமாகத் தான் தமிழ் மக்கள் இன்று நிர்க்கதி ஆகி நிற்கிறார்கள்.
ஒரு தமிழ் பிரதேச செயலகர் ,தமிழ் அதிகாரிகள் ,தமிழ் உயர் அதிகாரிகள் போன்றோர் பொலிஸாரினால் மிக கேவலமாக கையாளப்படுகிறார்கள்.
மருத்துவமனை எவ்வாறு 24 மணித்தியாலங்கள் இயங்குகின்றதோ அதேபோன்று 24 மணி நேரம் இயங்குகின்ற சேவை தான் பொலிஸ். இதில் குறிப்பிட்ட சில தீய சக்திகள் பணம் உழைக்கலாம் என்ற நோக்குடனே பெரும்பாலானோர் பொலிஸ் உத்தியோகத்தில் சேர்கிறார்கள் .இதனால் பொலிஸ் திணைக்களமே சீர்குலைந்து விட்டது .
எனவே மேற்குறித்த சம்பவத்திற்கு காரணம் பொலிஸார் . குற்றவாளிகளை சரியான நேரத்தில் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை பெற்றுக்கொடுக்கவில்லை .
எங்களுடைய வருங்கால இளைஞர்களை காப்பாற்றி ,வருங்கால சமுதாயத்தை ஒரு உயர் நிலைக்கு கொண்டு செல்ல எங்கள் உறவுகள் ஒன்று சேர வேண்டும்.இப்படியான ஒரு உன்னதமான வழி முறையில் தான் இதனை முடிவுக்கு கொண்டு வரலாம்.
தவறான பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் ,அவர்கள் அந்த முறைப்பாட்டை எதிர்கொண்டு தங்களை நிரபராதி என நிரூபித்து மீண்டும் சேவை வழங்குவதற்கு முன்பதாக அவர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
தவறு செய்கின்ற பொலிஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்வது சரியாகாது. அது அவர்களை திருந்த வழி ஏற்படுத்தாது.
தவறு செய்கின்ற எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்து தன்னை நிரபராதி என நிரூபிக்கும் வரை மீண்டும் பதவியில் அமர முடியாத நிலையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக செய்ய வேண்டும்.இதன் மூலமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
மக்கள் சுதந்திரமாக ஒரு ஜனநாயக விழுமியங்களுடன் நிம்மதியாக வாழ வழியினை ஏற்படுத்துங்கள் .இது இலங்கையில் குறிப்பாக வட மாகாணத்தில் இல்லை .தமிழர் வாழும் பிரதேசங்களில் இல்லை என்றார்.
பிற செய்திகள்