இலங்கை திரு நாட்டிலே பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக போற்றப்படுகின்ற தேவார பாடல் பெற்ற தலமாகிய இந்து சைவ மக்களுடைய புராதனமான திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்திலே புனர்நிர்மான பணிகள் எல்லாம் நிறைவேறுவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையிலே தொல்பொருள் ஆராச்சியாளர்கள் இதற்கு இடையூறு வழங்குவதாகவும் ஆலயங்களுக்கு செல்கின்ற இரண்டு பாதைகளில் கடைகளை நிரந்தரமாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டு வருவதாகவும், ஆலயத்தில் புனித தன்மைகள் மீறப்படுவதாகவும் ,சட்ட விரோதமாக கட்டடங்கள் அமைக்க இருப்பதாகவும் போன்ற விடயங்கள் பல்வேறுபட்ட ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோம் என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இவ்வாறான புராதனம் மிக்க இந்து மக்களின் பாரம்பரியமான இந்த ஆலயத்தினை பாதுகாக்க வேண்டும் ,அங்கு இவ்வாறான அத்துமீறிய தொல்பொருள் ஆராச்சியாளர்களுடைய இந்த தடைகள் ஆலயத்தின் திருப்பணிகளை செய்ய விடாது தடுக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது .
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்றத்திலே எடுத்து கூறியிருக்கிறார் .எனவே இது வெறுமனே பேச்சோடு நின்று விடாமல் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் தேசிய கட்சியினுடைய தலைவர் இரா.சம்மந்தன் இதில் முழுமையான கவனம் எடுக்க வேண்டும்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி,பிரதமர் ,தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனடியாக அனைவரது ஏகோபத்திய குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கப்பட வேண்டும்.
இந்த ஆலயத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற தொல்பொருள் ஆராச்சியாளர்களுடைய செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் ,அத்துடன் ஆலயத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச இந்து மத குருவிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.
பிற செய்திகள்