தென்னாபிரிக்க டி20 லீக்கில் நிரோஷன் திக்வெல்ல உட்பட 10 வீரர்கள் ஒப்பந்தம்!

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் புதிய டி20 லீக் தொடரில் நிரோஷன் திக்வெல்ல உட்பட இலங்கையின் 10 வீரர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த லீக் தொடருக்காக ஒப்பந்தமான 30 பெயர்கள் பற்றி தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது. எனினும் அந்த வீரர்கள் பற்றிய விபரம் குறிப்பிட்டு கூறப்படவில்லை.

இதில், இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது. குறிப்பாக ஒயின் மோர்கன் மற்றும் ஜேசன் ரோய் போன்ற முன்னணி வீரர்களும் இதில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இருப்பினும், இந்திய பிரிமியர் லீக் உரிமையாளர்கள் இந்தத் தொடருக்கான அணிகளின் உரிமையையும் பெற்றிருப்பதால் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறவில்லை என்று நம்பப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ், சென்னை சுபர் கிங்ஸ், லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகங்கள் இந்த அணிகளை வாங்கியுள்ளன.

மொத்தம் ஆறு அணிகள் பற்கேற்கும் இந்தத் தொடரில் ஓர் அணியில் 17 வீரர்கள் இடம்பெறுகின்றனர். இதில் இலங்கையின் துஷ்மன்த சமீர, சாமிக்க கருணாரத்ன, மஹேஷ் தீக்ஷன, மதீஷ பதிரன, அகில தனன்ஜய, சீகுகே பிரசன்ன, நுவன் பிரதீப், தனஞ்சய லக்ஷான் மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகிய வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

எனினும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள புதிய டி20 லீக் தொடரான சர்வதேச லீக் டி20 தொடரில் இலங்கையின் முதன்மை வீரர்களாக பெயரிடப்பட்ட வனிந்து ஹஸரங்க மற்றும் பானுக ராஜபக்ச ஆகியோர் இந்த பட்டியலில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *