இருப்பிடமின்றி நாடு நாடாக அலைகின்றார் கோட்டாபய- சஜித் கிண்டல்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்தனர் என்று வீராப்புப் பேசி வந்த கோட்டாபய ராஜபக்ச இறுதியில் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி இருப்பிடம் இல்லாமல் ஒவ்வொரு நாடு நாடாக அலைகின்றார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”இம்மாதம் நேற்று(11) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலங்கை வருவார் என்றும், அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்த ‘மொட்டு’ அணியினர் வாயடைத்து நிற்க, கோட்டாபய தாய்லாந்து நாட்டின் காலடியில் தற்போது விழுந்துள்ளார்.

அங்கும் அவர் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்க முடியாது. அவர் இனி எந்த நாட்டின் காலடியில் விழப்போகின்றார் என்பதை மொட்டுக் கட்சியினரிடம் கேட்க விரும்புகின்றேன்.

மேலும், நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய, இனி நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் மீண்டும் இலங்கை வந்தால் மென்மேலும் அவமானங்களைச் சந்திக்க வேண்டி வரும். மக்களை வாட்டி வதைத்த கோட்டாபய, இன்று உலக அரங்கில் அவமானப்பட்டு நிற்கின்றார்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

சிங்கப்பூரில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருந்த அவர் நேற்று(11) மாலை சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து நேரப்படி நேற்று மாலை எட்டு மணியளவில் அவர் அங்கு சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவர் தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ராஜதந்திர கடவுச்சீட்டு அடிப்படையில் 90 நாட்கள் அந்நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *