
எனக்குத் துறைத்தலைவர் பதவியைத் தராவிடின் உயிரை மாய்ப்பேன்’ என்று கூறிக்கொண்டே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தன்னுடலில் மண்ணெண் ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:–
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துறைத்தலைவர் ஒருவர் ஊதியத்துடன் கூடிய ஒருவருட விடுமுறை எடுப்பதற்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பமும் அங்கீகரிக்கப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டதால், குறித்த துறைத்தலைவராக – பதில் கடமை புரிய – இன்னொரு பேராசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், குறித்த துறைத்தலைவர் மாணவிகளிடமும், சக பெண் விரிவுரையாளர்களிடமும் பாலியல் லஞ்சம் கோரியதாலேயே பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதியவர் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்று இணையங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து, உடனடியாகத் தனது விடுமுறையைப் பிற்போட்டுவிட்டு, பழைய துறைத்தலைவர் மீண்டும் அதே பதவியில் பணியாற்ற விருப்பம் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தலைமையில் முக்கியமான கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது கூட்ட மண்டபத்துக்குள் குறித்த துறையின் தலைவராகப் பதில் கடமைகளைப் பொறுப்பேற்கவிருந்த பேராசிரியர் உள்நுழைந்தார்.
தனக்கு வழங்கப்பட்ட துறைத்தலைவர் பதவியில் தன்னையே நியமிக்கவேண்டும் எனவும், அவ்வாறில்லாவிட்டால் உயிரை மாய்ப்பேன் என்றும் கூறி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரின் முன்னிலையில் அவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீக்குளிக்க முயன்றுள்ளார்.
எனினும் துணைவேந்தர் உள்ளிட்டவர்கள் விரைந்து செயற்பட்டு பேராசிரியரின், இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று தெரியவருகின்றது.