
வடக்கு மாகாணத்தில் பூநகரி, மன்னார் பகுதிகளில் 500 மில்லியன் டொலர் செலவில் முன்னெடுக்கப்பட வுள்ள காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது ரணில் அரசாங்கம்.
இந்தத் தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது ருவிற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்
இந்தத் திட்டத்தின் மூலம் அதானி நிறுவனம், மன்னாரில் 286 மெகாவாட், பூநகரியில் 234 மெகாவாட் திறன்கொண்ட இரு காற்றாலை திட்டங்களை நிறைவேற்றவுள்ளது.
ஏற்கனவே மன்னார் காற்றாலைத்திட்டம் அதானி குழுமத்துக்கு வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதானியும் நேரடியாக மன்னாருக்கு வந்து, நிலைமைகளை பார்வையிட்டுச் சென்றிருந்தார்.
ஆயினும் இந்திய நிறுவனத்துக்கு இந்தத் திட்டத்தை வழங்கக்கூடாது என்று தெற்கில் எழுந்த எதிர்ப்பலை காரணமாக, அதானி குழுமத்துக்கு இந்தப் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி காற்றாலைத் திட்டத்தை வழங்குவதில் ராஜபக்ச அரசாங்கம் பின்னடித்து வந்தது.
இந்த நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனக்கப்பல் நிறுத்தப்பட்டமைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள அதே தினத்தில் (நேற்று), இந்த ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனத்துக்குக் கைமாற்றப்படுகின்றமைக்கு தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிப்பதற்கு இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் நேற்றையதினம் அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போதே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது என்று அமைச்சர் தனது ருவிற்றரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.