மண்டைதீவு, அல்லைப்பிடியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு!

மண்டைதீவு, அல்லைப்பிடியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டு, காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினரின் தேவைக்காக இன்று காலை 3 இடங்களில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜே.10 கிராமசேவையாளர் பிரிவு அல்லைப்பிட்டியில் 7 பரப்பு காணியும், ஜே.11 மண்கும்பானில் 4 பரப்பு காணியும், புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் கடற்படையினரின் தேவைகளுக்காக காணி சுவீகரிக்கப்பதற்காக நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று காலை அவ்விடத்திற்கு வருகை தந்த போது பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் திணைக்கள வாகனத்தை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்ததால் காணி சுவீகரிப்பு செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காணி சுவிகரிப்பு எதிர்ப்பு முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தீவகபகுதி மக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், நாளை புங்குடுதீவு பத்தாம் வட்டார கடற்கரையை அண்டிய பகுதியில் மணியம் தோட்டத்தை அண்டியதாக, கடற்படையினரின் தேவைகளுக்காக காணியொன்றும் சுவீகரிக்கப்படவுள்ளது.

கடந்த காலங்களில் இரு தடவைகள் இக்காணிகளை கடற்படையினர் சுவீகரிக்க முயன்றபோதிலும், பொதுமக்கள், அரசியல்வாதிகள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அம்முயற்சி இடைநிறுத்தப்பட்ட நிலையில், மீளவும் காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply