திருமண வைபவங்கள் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் அதிகளவில் நடைபெற்று வரும் நிலையில், புகைப்பட கலைஞர்களுக்கு சுகாதார அமைச்சு விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
விழாக்கள் நிகழ்வுகளின்போது புகைப்படங்களை எடுக்கும் புகைப்படக் கலைஞர்கள், புகைப்படங்களில் தோன்றுவோரிடம் முகக்கவசங்களை அகற்றுமாறு கோர வேண்டாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், புகைப்படங்களை எடுக்கும் போது பலர் முகக்கவசங்களை அகற்றிவிட்டு படம் எடுக்கின்றனர். இது நல்ல விடயமல்ல.
அதேவேளை, அத்தியாவசியமான தேவைகளான உணவு உட்கொள்ளல், தண்ணீர் அருந்துதல் போன்ற தேவைகளைத் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு முகக்கவசங்களை அகற்ற வேண்டாம்.
கொண்டாட்டங்களின் போது அதிகபட்ச எல்லையை கருத்திற் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், கொரோனாத் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






