பசறைக்கு செல்லும் பிரதான வீதியில் அலுபொத்த 11 ஆவது கிலோ மீற்றர் மைற்கல்லுக்கு அருகில் மனித மண்டையோடு ஒன்று படல்கும்புர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட நிலத்தில், 10 வயது சிறுவன் கொக்கோ பறித்துக் கொண்டிருக்கும் போது குறித்த மண்டையோடை கண்டுள்ளான்.
இது தொடர்பில் குறித்த சிறுவன் தனது சகோதரியிடம் தெரிவித்ததுடன், பின்னர் 119 அவசர பொலிஸ் பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த மண்டையோடு அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மொனராகலை பதில் நீதவான் சிசிர பண்டார நேற்று தள பரிசோதனையை மேற்கொண்டார்.
மார்ச் 01 ஆம் திகதி கொழும்பு டாம் வீதியில் பயணப்பையில் இருந்து தலையில்லா சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டையோடு குறித்த இளம் பெண்ணுடையதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அவரது கொலையின் சந்தேக நபராக, 52 வயதான புத்தல பொலிஸ் உப-இன்ஸ்பெக்டர் என கண்டறியப்பட்டதுடன், அவர் படல்கும்புர பிரதேசத்தை சேர்ந்தவர்.
அவர் மார்ச் 03 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






