ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்கு பதிலாக புதிய திட்டம்! – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அறிவிப்பு

பிரித்தானியாவினால் செயற்படுத்தப்படவுள்ள ‘அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டத்தில்’ இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் , ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைக்கு பதிலாக அடுத்த வருடம் முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் இந்த திட்டம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம் வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றுமதிப் பொருட்கள் பிரித்தானிய சந்தையில் வரியின்றி பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. இதற்கு மேலதிகமாக மேலும் 150 இற்கும் அதிக பொருட்களுக்கு சுங்க வரி நீக்கப்படும்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம் சில பருவகால வரி கட்டணங்களை எளிமையாக்கியுள்ளது. இலங்கையின் உற்பத்திகள் பிரித்தானிய சந்தைக்கு விநியோகிக்கப்படுவதை எளிதாக்குவதே இதன் நோக்கமாகக் காணப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய திட்டமானது, ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை முறைக்குப் பதிலாக பிரித்தானியாவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையுடன் எதிர்கால வர்த்தக வாய்ப்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு பிரித்தானியா எதிர்பார்க்கிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *