நோர்வே வெளிவிவகார பிரதானியுடன் தமிழ் கட்சி தலைவர்கள் இணையவழி சந்திப்பு!

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான விசேட அதிகாரி ஆன் கிளாட் மற்றும் ஆறு தமிழ் கட்சி தலைவர்களுக்கு இடையில் இணையவழி சந்திப்பு நேற்று நடைபெற்றதாக தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில், தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை மற்றும் தமிழ் மக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமாதான நடவடிக்கைகளில் நோர்வே ஆர்வத்தோடு கடந்த காலங்களில் பங்கு பற்றி இருந்த பொழுதிலும் 2009 யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிகளில் அவர்களின் பங்களிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து தமிழ் மக்களிடமிருந்து எட்டி இருப்பது போன்ற ஒரு தோற்றம் அவதானிக்கப்படுவதாக தமிழ் தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

அதற்கு பதில் அளித்த ஆன் கிளாட், சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுப்பதற்கு தாங்கள் சர்வதேச சமூகத்தால் முன்னிலைப்படுத்தபட்டதாகவும் அது தோல்வியடைந்த பின்னர் நீதிப் பொறிமுறையை வலியுறுத்துவதற்காக வேலைத்திட்டங்களில் சர்வதேச சமூகத்தோடு தாங்கள் தொடர்ந்து பயணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐநாவில் பல்வேறு விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது என்ற கருத்து தமிழ் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை என்ற பல பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது.

நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இலங்கை அரசியலில் குறைவாகவே காணப்படுகிறது.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீள வேண்டிய தேவை உள்ளது.

அதற்கான ஆதரவை தமிழ்த் தரப்புகள் நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதற்கு தயாராக உள்ள போதிலும் அரசு தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை கொள்வது நன்மை பயக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு தாங்கள் தயாராகிக் கொண்டு இருப்பதனால், தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை நோர்வே அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு அவற்றை ஐநாவில் பிரதிபலிக்கும் வகையில் அங்கத்துவ நாடுகளுக்கு தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் ஆன் கிளாட் இதன்போது உறுதி அளித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா, நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஸ்ரீதரன் கோவிந்தன் கருணாகரம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதேவேளை ஸ்ரீகாந்தா கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட போதிலும் உடல்நிலை காரணமாக கூட்டத்தில் தொடர்ந்தும் பங்குபெற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *