நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானதாகக் கூறி சட்ட நடவடிக்கை எடுத்த அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் பலருக்கு கோடிக்கணக்கான ரூபா நட்டஈடு வழங்க தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிபாரிசு செய்யப்பட்ட நட்டஈடுகளின் பட்டியலை ஆராயும் போது இது தெளிவாகும் எனவும், நீதித்துறை நடவடிக்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை விடுத்து அவற்றை வெறும் அரசியல் பழிவாங்கல்களாக குறிப்பிடுவது பொருத்தமானதல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட்டார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் போது தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரிவினருக்கு கோடிக்கணக்கான ரூபா நட்டஈடு வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்தால் அதற்கு தனது எதிர்ப்பையும் அதிருப்தியையும் அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்களின் பணத்தை இவ்வாறு வீண் விரயம் செய்வதை தவிர்த்து மக்களையும் நாட்டையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக தனது முழு ஆற்றலையும் பயன்படுத்துவதே இந்த நேரத்தில் அரசாங்கத்தின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்