அனுராதபுரம் பகுதியில் ஏற்பட்ட பலத்த மழைகாரணமாக மல்வத்து ஓயா நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் மன்னார் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகின்றது
தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் குஞ்சுக்குளம், தேக்கம் பகுதிகளை அண்மித்து வசிப்போர் அவதானமாக செயற்படுமாறு மன்னார் மாவட்ட அரச அதிபர் ஸ்ரான்லி டிமேல் கோரிக்கை விடுத்துள்ளார்
தொடரும் மழை காரணமாக மல்வத்து ஓயாவின் நீர்மட்டத்தின் அளவு அதிகரித்து வருகின்றமை தொடர்பாக மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் நடராஜா யோகராஜா, மத்திய நீர்ப்பாசன பொறியியலாளர், மன்னார் அரச அதிபர், மடு பிரதேச செயலாளர் அடங்கிய உயர் மட்ட குழுவினர் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் நீர்வரத்து பிரதான ஆற்றுப்பகுதிக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்டதுடன், நீர்மட்டம் தொடர்பான விடயங்கள் மற்றும் பாதுகாப்புக் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில், தற்போது தேக்கம் பகுதியில் 10 அடி 6 அங்குளத்திற்கும் அதிகமான நீர்மட்டம் காணப்படுவதாகவும், தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் நீர்மட்டம் அதிகரிக்கும் என்பதால் அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் அவதானத்துடன் செயற்பாடுமாறு மாவட்ட அரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் பணித்துள்ளார்.








