
நாட்டில் அதிகரித்துள்ள விலையேற்றத்தை கண்டித்து புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களும் பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களும் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 9 மணிக்கு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய உறுப்பினர்கள் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் மாட்டு வண்டிலில் அதிகரித்த விலைக்குரிய பொருட்கள் சிலவற்றை ஏற்றியவாறும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் அதிகரித்துள்ள கேஸ் விலை, சீனி விலை, சீமெந்து விலை உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராகவும் விவசாயிகளின் உரப்பிரச்சினைக்கு எதிராகவும் குறித்த கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை வரை பேரணியாக சென்றனர்.
பேரணியாகச் சென்றவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரிடம் இந்த விடயம் தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.





